×

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு

தேன்கனிக்கோட்டை: தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி, காதலனுடன் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அருகேயுள்ள இருதாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்(37). இவரது மனைவி சுமதி (34). இவர்களுக்கு 12 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். அருகில் உள்ள ஜக்கேரியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் கடந்த 3 வருடங்களாக சுமதி பணியாற்றி வந்தார்.

அதே நிறுவனத்தில் எம்.கொத்தூரைச் சேர்ந்த பாலகுமார் (27) என்பவரும் வேலைக்கு சேர்ந்தார். இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதுகுறித்து ஸ்ரீதர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சுமதியை கண்டித்துள்ளனர். ஆனாலும், சுமதியால் பாலகுமாரை மறக்க முடியவில்லை. அவருடன் தொடர்பை கைவிடாமல் தொடர்ந்துள்ளார்.

ஸ்ரீதரின் அண்ணன் சீனிவாசன், தனது குடும்பத்துடன் அப்பகுதியிலேயே வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சீனிவாசன் வீட்டிற்கு சென்றிருந்த ஸ்ரீதரின் மகள் இரவு அங்கேயே தங்கி விட்டார். ஸ்ரீதரின் மகனும், வழக்கம் போல் அருகில் உள்ள தாத்தா வீட்டிற்கு தூங்குவதற்காக சென்று விட்டார். இதனால், ஸ்ரீதர் மற்றும் சுமதி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று சீனிவாசன் எழுந்ததும் ஸ்ரீதரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு படுக்கையில் ஸ்ரீதர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். அவரது 2 பக்க கன்னங்களும் சிவந்த நிலையில் இருந்தது. காதின் அருகில் ரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டது. மேலும், வலது கை விரல்களிலும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அருகில் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்திருப்பதை கண்டு சீனிவாசன் திடுக்கிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுமதியிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதையடுத்து, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், தகாத உறவு காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டியது தெரிய வந்தது.

இதுகுறித்து சுமதி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனது கள்ளத்தொடர்புக்கு கணவர் இடையூறாக இருந்தார். இதுகுறித்து பாலகுமாரிடம் கூறினேன். எனது கணவர் இருக்கும் வரையில் நாம் உல்லாச வாழ்க்கையை தொடர முடியாது என்றேன். இதையடுத்து, எனது கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.

அதன்படி, வீட்டில் குழந்தைகள் இல்லாதது குறித்து பாலகுமாருக்கு தகவல் தெரிவித்து, பின்வாசலை திறந்து வைத்திருந்தேன். அதிகாலையில் வீட்டிற்கு வந்த பாலகுமாருடன் சேர்ந்து, நன்கு தூங்கிக் கொண்டிருந்த எனது கணவரின் கைகளை பிடித்து கொண்டு, தலையணையால் முகத்தை பலமாக அழுத்தினோம். இதில், எனது கணவர் துடி துடித்து உயிரிழந்தார். அதனை உறுதி செய்து கொண்டு பாலகுமார் அங்கிருந்து சென்று விட்டார்.

கணவர் இயற்கையாக இறந்தது போல், ஊரை ஏமாற்றி விடலாம் என திட்டமிட்டேன். ஆனால், போலீசார் கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு சுமதி வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனார். இதையடுத்து சுமதி மற்றும் அவரது காதலன் பாலகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Sridhar ,Iruthalam village ,Kelamangalam, Dhenkanikottai taluk, Krishnagiri district ,Sumathi ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே பிரசவ வலியால்...